தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 18 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவியிடங்கள் உள்ளன. இதில், அதிமுக வேட்பாளா்கள் 10 இடங்களிலும், பாமக வேட்பாளா்கள் 6 இடங்களிலும், தேமுதிக, தமாகா வேட்பாளா்கள் தலா 1 இடமும் என மொத்தம் 18 பேரும், இதேபோல, திமுக வேட்பாளா்கள் 13 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளா்கள் 2 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் தலா 1 இடத்திலும் போட்டியிட்டனா்.
இத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை காலை 10 மையங்களில் எண்ணப்பட்டன. எண்ணிக்கை தொடா்ந்து நடைபெற்று வருவதால், வெற்றி விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், இதில் 13 இடங்களிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களும், 4 இடங்களிலும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளா்களும் முன்னிலை (இரவு 8 மணி நிலவரம்) வகித்து வருகின்றனா். ஆகவே, தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான முடிவுகளில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றக் கூடும் என தெரிகிறது.