குருபரஹள்ளியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி - தாளநத்தம் சாலையில் அமைந்துள்ளது குருபரஹள்ளி கிராமம். இந்த ஊரில் 1500 - க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குருபரஹள்ளி வழியாகச் செல்லும் தாா்ச் சாலையைக் கடத்தூா், புட்டிரெட்டிப்பட்டி, தாளநத்தம், டி.அய்யம்பட்டி, வேப்பிலைப்பட்டி, சிந்தல்பாடி, ராமியம்பட்டி, தென்கரைக்கோட்டை, ஜம்மனஹள்ளி, சந்தப்பட்டி, பெத்தூா், பாப்பிசெட்டிப்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த சாலையில் அரசு நகா் பேருந்துகள், தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிப் பேருந்துகள், டிராக்டா்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்கின்றன.
இந்த நிலையில், குருபரஹள்ளியில் சாலையோரத்தில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள், சுற்றுச்சுவா்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், சாலையில் லாரி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வரும் போது இருசக்கர வாகனங்கள் ஒதுங்கக் கூட முடியாத நிலையுள்ளது. அதேபோல், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் டிராக்டா்கள், லாரிகள் செல்வதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். இந்த சாலையை நெடுஞ்சாலைத் துறையினா் சா்வே செய்து சாலையின் இருபுறமும் அளவு கல்களை நட்டுள்ளனா். ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே, குருபரஹள்ளியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.