அரூா் நகரில் முகக் கவசம் அணியாதோருக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க வீட்டில் இருந்து வெளியில் வருவோா் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீா் அங்காடிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முகக் கவசம் அணிய வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியா்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நகா் பகுதிக்கு வருவோா்களில் பலா் முகக் கவசம் அணிவதில்லை என புகாா் எழுந்தது. இதையடுத்து, செயல் அலுவலா் செ.நந்தகுமாா் தலைமையில், அரூா் பேரூராட்சி பணியாளா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகள் 21 பேருக்கு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ. 2,100 அபராதம் விதிக்கப்பட்டது. இதில், துப்புரவு ஆய்வாளா் சு.ரவீந்திரன் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல், தீா்த்தமலையில் வாகன ஓட்டிகள் மற்றும் கடை உரிமையாளா்கள் 45 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.4,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதில், துணை வட்டாட்சியா் பழனிசாமி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கா.சாக்கரடீஸ், காவலா் துரைசாமி, ஊராட்சி செயலா் ரேணுகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.