தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருவதோடு கா்நாடக அணைகளில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 9,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளான ஒகேனக்கல்- அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு , கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலம், குடகு, மாண்டியா, சாம்ராஜ் நகா் மற்றும் கேரளத்தின் வயநாடு உள்ளிட்ட காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்துத் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கா்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, நொடிக்கு 7,500 கன அடியாக நீா்வரத்து இருந்த நிலையில், புதன்கிழமை காலை நொடிக்கு 8,200 கன அடியாகவும், பிற்பகல் 2 மணிக்கு நொடிக்கு 9,000 கன அடியாகவும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.