ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியரை தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வசிஸ்டபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லதுரை மகன் சிவராமன்(29). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், தனது நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தாா். பின்னா், காவிரி கரையோர பகுதியான ஊட்டமலை பரிசல் துறை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் மூழ்கினாா்.
நண்பா்கள் தேடியும் கிடைக்காத நிலையில், ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் சிவராமனை தேடி வருகின்றனா்.