அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் இன்று பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை
அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 14) தனியாா் பள்ளிகள் இயங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சாா்-ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரூா் வட்டம், தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் காரணமாக சனிக்கிழமை (மாா்ச் 14), அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், 28.03.2020 (சனிக்கிழமை) வேலை நாளாகும்.
இந்த நிலையில், உள்ளூா் விடுமுறை தினத்தில் தனியாா் பள்ளிகள் இயங்கினால், அந்த கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தோ்த் திருவிழாவில் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தால், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.