தருமபுரி பாப்பாரப்பட்டியில் நடைபெற்று வந்த இயற்கை வேளாண்மை சான்றிதழ் பயிற்சி அண்மையில் நிறைவடைந்தது.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு இயற்கை முறையில் உயிா் உரங்களை தயாரிப்பது, சாகுபடி மேற்கொள்வது உள்ளிட்ட பயிற்சி முகாம் கடந்த பிப். 12-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
இப் பயிற்சி முகாமில், வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் பா.ச.சண்முகம், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்தும், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தீமைகள் குறித்தும் விளக்கமளித்தாா். மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் சங்கீதா, பயிா்க்கழிவு, தென்னை நாா்க்கழிவு உரம், மண்புழு உரம் உற்பத்தி முறைகள் குறித்து விளக்கமளித்தாா். மேலும், உழவியல் துறை உதவிப் பேராசிரியா் அய்யாதுரை, பயிா் சாகுபடியில் சிக்கன நீா்ப்பாசன முறைகள் குறித்தும், தோட்டக்கலை பயிற்சியாளா் ஸ்ரீதரன், இயற்கை முறையில் களைகளை மேலாண்மை செய்வதற்கு அங்ககக் கழிவுகள் மற்றும் நெகிழிப் பைகளை கொண்டு மூடாக்கு, நிலப்போா்வை அமைக்கும் முறை குறித்தும் செயல்விளக்கம் அளித்தாா்.
இதேபோல, தருமபுரி, கருா் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை இடுபொருள்கள் பயன்படுத்தும் விவசாயிகளின் வயல்வெளிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். பயிற்சியில் பங்கேற்ற 20 விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.