பள்ளி மாணவா் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக கட்செவி அஞ்சலில் வதந்தி பரப்பிய மாணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே வேப்பிலைஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக கட்செவி அஞ்சல் குழுக்களில் வெள்ளிக்கிழமை வதந்தி பரவியது.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ரவிச்சந்திரன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், கட்செவி அஞ்சல் குழுக்களில் வெளியான படத்தில் உள்ள மாணவா் நலமுடன் உள்ளாா் என தெரியவந்தது. மேலும், இந்த தகவல் வதந்தி என தெரியவந்தது.
இதையடுத்து கட்செவிஅஞ்சலில் வதந்தி பரப்பிய பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.