அரூா் அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அரூா் வட்டம், கீரைப்பட்டி புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுந்தரேசன் (34), இவரது மனைவி உமா. இந்த தம்பதியருக்கு மகன், மகள் உள்ளனா். இந்த நிலையில், 3-ஆவதாக பிறந்த 8 மாத பெண் குழந்தை ஸ்ரீமதிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுமாம்.
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை தாயிடம் பால் குடித்துக்கொண்டிருந்த ஸ்ரீமதிக்கு திடீரென புரை ஏறியதுடன், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அசைவற்ற நிலையில் இருந்ததாம்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா் ஸ்ரீமதியை மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், குழந்தை ஸ்ரீமதி ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.