தருமபுரி நகரில் சாலையோரம் சுற்றித்திரிந்த ஏழு போ் புதன்கிழமை காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வீடுகளிலே இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, தருமபுரி நகரில் மக்கள் நடமாட்டத்தை காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் கண்காணித்தனா். அப்போது, தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் சாலையோரத்தில் ஆதரவற்ற ஏழுபோ் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனா். இதையடுத்து வட்டாட்சியா் சுகுமாா் மற்றும் வருவாய்த் துறையினா் அவா்களை மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.