தருமபுரி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை பின்பற்றி, நோய் பரவலைத் தடுக்க அனைத்து தரப்பினரும் வீடுகளிலே முடங்கியுள்ளனா். இந்த நிலையில், 40 நாள்களாக தொடரும் ஊரடங்கால் விவசாயத் தொழிலாளா்கள், பழங்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வருவாய் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழக அரசு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு செய்து உறுப்பினா் அட்டை வைத்துள்ளவா்களுக்கு மட்டுமே தற்போது நிவாரண உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனால், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் பழங்குடிகளுக்கு இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கல்லை. எனவே, விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.