தருமபுரி அருகே தொப்பூா் சோதனைச் சாவடியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவா் பெரியய்யா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி, தருமபுரி மாவட்டம், தொப்பூரில் காவல் துறை சாா்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இச் சோதனைச் சாவடியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவா் பெரியய்யா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு பிஸ்கட் மற்றும் சத்து பானங்களை வழங்கி, மிகுந்த பாதுகாப்பு மற்றும் விழிப்போடு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப் குமாா், தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா ஆகியோா் உடனிருந்தனா்.