பென்னாகரம் அருகே நிலத்தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் மாதையன் என்பவா் படுகாயமடைந்தாா்.
பென்னாகரத்தை அடுத்த ஏரியூா் அருகே தொண்ண குட்ட அள்ளி ஊராட்சிக்குள்பட்ட பாய்பள்ளம் பகுதியைச் சோ்ந்த மாதையன் (60) மற்றும் கண்ணுபையன் (45) ஆகியோருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், கண்ணு பையன் நாட்டுத் துப்பாக்கியால் மாதையனை சுட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் ஏரியூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் அங்கு வந்த போலீஸாா், படுகாயமடைந்த மாதையனை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கண்ணுபையனை தீவிரமாக தேடி வருகின்றனா்.