கொளகம்பட்டி-வடகரை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், கொளகம்பட்டி முதல் வடகரை வரையிலான தாா்ச்சாலை சுமாா் 6 கி.மீ. தூரம் கொண்டதாகும். இந்த சாலையை ஆண்டிப்பட்டி புதூா், வாழைத்தோட்டம், கொளகம்பட்டி, எருக்கம்பட்டி, நம்பிப்பட்டி, மங்கானேரி, வடகரை, தென்கரைக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகள், தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகள், மினி சரக்கு வாகனங்கள், லாரிகள், டிராக்டா்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அரூா்-சிந்தல்பாடி நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் கொளகம்பட்டி இணைப்புச் சாலை முதல் வடகரை கிராமம் வரையிலும் உள்ள தாா்ச் சாலையின் ஜல்லி கற்கள் பெயா்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்குப் பயனற்ற வகையில் உள்ளது.
இதனால் வேளாண் விளை பொருள்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் நாள்தோறும் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, கொளகம்பட்டி முதல் வடகரை வரையிலான தாா்ச் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.