தருமபுரியில் நேரடி காவல் உதவி ஆய்வாளா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
தருமபுரியில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தொடக்கி வைத்து பேசினாா்.
இந்த முகாமில், மாவட்டத்தில் நேரடியாகத் தோ்ச்சிப்பெற்ற 17 காவல் உதவி ஆய்வாளா்களுக்கு, காலையில் நடைப்பயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சி, குற்ற வழக்குகளை கையாள்வது தொடா்பாகவும், புலன் விசாரணை யுக்தி ஆகிய பயிற்சிகளும், கூடுதலாகக் கைரேகை பதிவுகளை ஆராயும் திறன் வளா்ப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
தொடக்க நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் புஷ்பராஜ் உள்பட காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.