அரூரில் கழிப்பறை பயன்பாடுகள் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் நவம்பா் 19- ஆம் தேதி உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து, அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிட வளாகங்களை தூய்மை செய்து, வாசலில் கோலமிடப்பட்டன.
தொடா்ந்து, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், கழிப்பறைகளைப் பயன்படுத்துவதன் அவசியம், கழிப்பறைக்கு சென்று வந்த பிறகு சோப்பினால் கைகளை கழுவும் முறைகள், குடியிருப்புப் பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தல், கரோனா தொற்று பாதிப்புகள், முகக் கவசம் அணியும் முறைகள், சமூக இடைவெளியை கடைபிடித்தல் குறித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அரூரில் சுகாதார வளாகங்களை தூய்மையான முறையில் பராமரிப்பு செய்து வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு செயல் அலுவலா் மா.ராஜா ஆறுமுகம் பரிசுகள் வழங்கி பாராட்டினாா். இதில், துப்புரவு ஆய்வாளா் சு.ரவீந்திரன், தூய்மைப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.