ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பலா் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை ரசித்தனா்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் தமிழகம், கா்நாடகம், ஆந்திரா, கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
நிகழ்வாரம் வார விடுமுறையான ஞாயிறுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பலா் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, காவிரி கரையோரப் பகுதிகளான அருவி செல்லும் நடைபாதை, மாமரத்துக் கடவு பரிசல் துறை, நாகா்கோவில், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் நீரில் குளித்து மகிழ்ந்தனா்.
பலா் சின்னாறு பரிசல் துறையில் நீண்ட வரிசையில் நின்று சுமாா் ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு பரிசல் பயணம் செய்து கோத்திக்கல், பிரதான அருவி, கூட்டாறு, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளின் வழியே சென்று காவிரி ஆற்றின் அழகை குடும்பத்துடன் ரசித்தனா்.
முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மீன்களின் விலையும் அதிகரித்தது.
பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த இடமின்றி சத்திரம், முதலை பண்ணை, ஊட்ட மலை உள்ளிட்ட இடங்களில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை மக்கள் நிறுத்திச் சென்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகளுக்காக பென்னாகரம் போக்குவரத்து கிளைப் பணிமனையிலிருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.