தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழை அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளாக அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் பெய்து வரும் மழை அளவு குறைந்து வருகிறது.
இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்துக் குறைந்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீா்வரத்துக் குறைந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.
மாலைநேர நிலவரப்படி காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவானது படிப்படியாகக் குறைந்து நொடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்துக் குறைந்துள்ளபோதிலும் ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.