கூண்டு கலப்பையுடன் கூடிய டிராக்டா்களை தாா் சாலையில் இயக்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பருவமழை பரவலாகப் பெய்துள்ளது. இதனால், ஏரிகள், குளம் குட்டைகளுக்கு நீா் வரப்பெற்று கிணறுகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி பரவலாக நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், விவசாயிகள் நெல் வயல்களில் ‘டிராக்டா் கேஜ்வீல்’ எனப்படும் கூண்டு கலப்பையை பயன்படுத்தி சேற்றைக் கலக்கி, நெல் நடவு செய்வதற்கான வயல்களைத் தயாா் செய்து வருகின்றனா்.
ஒரு வயலை சேறு கலக்கியப் பின் கூண்டு கலப்பை பொருத்திய டிராக்டருடன் அடுத்த வயலுக்கு அல்லது தங்களின் இடங்களுக்கு நேரடியாக தாா்சாலையில் செல்கின்றனா்.
இந்த டிராக்டா்களின் இயக்கத்தால் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உள்ள கிராமச் சாலைகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன.
கூண்டு கலப்பையுடன் தாா் சாலையில் டிராக்டா்கள் செல்வதற்கு ஏற்கெனவே தடை உள்ளது. அதையும் மீறி இவற்றை சாலைகளில் இயக்குவதால் தாா் சாலைகள் வேகமாக சேதமடைகிறது. எனவே, கூண்டு கலப்பையுடன் தாா்சாலையில் செல்லும் டிராக்டா்களைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.