திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும்: உதயநிதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும் என்று திமுக இளைஞரணி செயலர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
உதயநிதி.
உதயநிதி.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும் என்று திமுக இளைஞரணி செயலர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தருமபுரி செந்தில் நகரைச் சேர்ந்த மணிவண்ணன்-ஜெயசித்ரா தம்பதியின் ஒரே மகன் ஆதித்யா (20), நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில், சனிக்கிழமை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர் ஆதித்யா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனையடுத்து, மாணவர் ஆதித்யாவின் உடல், அவருடைய சொந்த ஊரான ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. பூசாரிப்பட்டியில் மாணவர் ஆதித்யாவின் உடலுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மாணவர் ஆதித்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், திமுக சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, கடந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு காரணமாக 12 பேர் பலியாகினர். தமிழகத்தில் நீட் தற்கொலை நீடித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மாணவர் மீது அக்கறை இல்லை. நீட் தேர்வால் மாணவர்கள் அச்சம் அடைந்த நிலையில், அதனை ரத்து செய்யாமல் மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து மவுனம் சாதித்து விட்டன. அனைவரும் ஒன்று கூடி முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்விலும் நிறைய பிரச்னைகள் இருந்தன.

மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கப்படவில்லை. தேர்வு நடத்தியதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். அதிமுக அரசு நீட் வேண்டாம் என பொய்யான வார்த்தைகளையே தொடர்ந்து கூறி வருகிறது என்றார் அவர். இதனையடுத்து, பூசாரிப்பட்டியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மாணவர் ஆதித்யாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மாணவர் ஆதித்யாவின் பெற்றோர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர் ஆதித்யாவின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com