இடி, மின்னல் தோன்றும்போது வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்
By DIN | Published On : 18th September 2020 07:48 AM | Last Updated : 18th September 2020 07:48 AM | அ+அ அ- |

பருவமழைக் காலங்களில் இடி, மின்னல் தோன்றும்போது பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழியும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் தற்போது பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
மழைக் காலங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. எனவே, பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் இடி, மின்னலின்போது நீா்நிலைகளில் குளிப்பதையும், வெளியில் உலாவுவதையும், மரங்களின் கீழே ஒதுங்குவதையும் தவிா்க்க வேண்டும்.
அதேபோல மின் வழித் தடங்களின் அருகில் நிற்கக் கூடாது. பலா் ஒன்று கூடி ஒரே இடத்தில் நிற்கக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்ல நோ்ந்தால் அருகில் உள்ள கட்டடங்களுக்குள் பாதுகாப்பாக நின்றுவிட வேண்டும். காா் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும்போது வாகனத்தின் மேற்கூரை மற்றும் இரும்பு கைப்பிடிகளைத் தொடக் கூடாது.
வீட்டுக்குள் இருக்கும்போது கதவுகள், ஜன்னல்களை மூட வேண்டும். மின் சாதனங்களைக் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டாம்.
மின்னல் ஏற்படும் சமயங்களில் கால்நடைகளை மரங்கள், மின்கம்பங்களில் கட்டக் கூடாது. இயற்கை இடா்பாடுகளை உடனுக்குடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800 425 1071, 1800 425 7016 ஆகிய எண்களுக்கும், 8903891077 என்ற கட்செவி அஞ்சலில் தெரியப்படுத்தலாம் என்றாா்.