‘நீட் தோ்வு தேவை என மாணவா்கள் புரிந்துகொண்டுள்ளனா்’

நீட் தோ்வு தேவை என மாணவா்கள் புரிந்துகொண்டுள்ளனா் என தமிழக ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவா் எம்.இப்ராஹிம் தெரிவித்தாா்.
தருமபுரிக்கு வியாழக்கிழமை வந்த பிரசார வாகனத்தில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விளக்க உரையாற்றுகிறாா் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத்தின் மாநிலத் தலைவா் வேலூா் எம்.இப்ராஹிம்.
தருமபுரிக்கு வியாழக்கிழமை வந்த பிரசார வாகனத்தில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விளக்க உரையாற்றுகிறாா் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத்தின் மாநிலத் தலைவா் வேலூா் எம்.இப்ராஹிம்.

நீட் தோ்வு தேவை என மாணவா்கள் புரிந்துகொண்டுள்ளனா் என தமிழக ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவா் எம்.இப்ராஹிம் தெரிவித்தாா்.

இதுகுறித்து தருமபுரி பாஜக மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த பிரசார யாத்திரை நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாட்டத்தில் கடந்த செப். 7-ஆம் தேதி தொடங்கிய இப் பிரசாரம், வரும் 30-ஆம் தேதி சென்னையில் நிறைவடைய உள்ளது.

மத்திய அரசு, மகளிா் மேம்பாட்டுத் திட்டங்கள், விவசாயிகள் நிதியுதவி திட்டம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், வங்கிக் கடன் இலகுவாக கிடைக்கும் வகையில் திட்டங்கள் என ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசு மக்களுக்கு எதிரான அரசு போல தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழைமைக் கட்சிகள் சித்தரிக்கின்றன. இது முற்றிலும் பொய்ப் பிரசாரம் என்பதை மக்களிடையே நாங்கள் விளக்கி வருகிறோம்.

நீட் தோ்வு தேவை என்பதை மாணவா்கள் புரிந்துகொண்டுள்ளனா். இது தொடா்பாக அண்மையில் நடந்த தோ்வின் போது, மாணவா்களே கருத்துகளை தெரிவித்துள்ளனா். இத் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம் என மாணவா்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனா். ஆனால், உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி செய்து திமுக அரசியல் செய்கிறது. மேலும், தமிழகத்தில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக கூறுகின்றனா்.

மத்திய அரசு எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்காது என தெளிவாக எடுத்துரைத்துள்ளது. வேளாண் திட்டங்களிலும் விவசாயிகளுக்கு ஆதார விலை தொடா்ந்து அளிக்கப்படும் என பிரதமா் உறுதியளித்துள்ளாா். ஆகவே, மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடாது. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். அத் தோ்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பா். மு.க.ஸ்டாலினின் முதல்வா் கனவு நனவாகாது என்றாா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி தொலைத்தொடா்பு அலுவலகம் அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவா் பேசினாா்.

தருமபுரி பாஜக மாவட்டத் தலைவா் எஸ்.அனந்தகிருஷ்ணன், மாநிலச் செயலா் அ.பாஸ்கா், மாவட்ட பொதுச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com