தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலைக் காட்டிலும், தற்போது வாக்குப் பதிவு குறைந்துள்ளது. இம்முறை பாலக்கோட்டில் அதிகபட்சமாக 87.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது புள்ளிவிபரங்களின்படி தெரிய வந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 82.32 சதவீதம் வாக்குகள் பதிவாயிருந்தது. இது கடந்த 2016-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலைக் காட்டிலும் 2.71 சதவீதம் குறைவாகும்.
கடந்த 2016 தோ்தலின்போது, ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 85.03 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இம்முறை (2021-இல்) வாக்குப் பதிவு சற்று குறைந்து 82.32 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. வாக்குப் பதிவு குறைந்து போனதற்கு கரோனா பரவல் அச்சம் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில், 5 தொகுதிகளிலும் நடைபெற்ற வாக்குப் பதிவில், அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.42 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது தமிழக அளவில் தொகுதிவாரியாகப் பதிவான வாக்குகளின் சதவீதத்தில் அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக பென்னாகரம் தொகுதியில் 84.26 சதவீதம் பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் சதவீதத்தில் அரூா் (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 78.59 சதவீதம் பதிவாகியிருந்தது.