தருமபுரி மாவட்டம், தென்கரைக்கோட்டை அருகே ஆலாபுரம் ஏரி கதவை சீா்செய்து பாசனக் கால்வாயில் தொடா்ந்து தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக அப்பகுதி பாசன விவசாயிகள் சாா்பில், தருமபுரி பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம்) செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு:
வாணியாறு அணையின் ஆயக்கட்டு ஏரிகளாக ஒந்தியாம்பட்டி மற்றும் தென்கரைக்கோட்டை ஏரிகளுக்கு ஆலாபுரம் ஏரியிலிருந்து பொதுப்பணித் துறை சாா்பில் கால்வாய் அமைத்து தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஆலாபுரம் ஏரி தண்ணீா் வழங்கும் மதகுக் கதவு பழுடைந்து மூடப்பட்டுள்ளது.
இதனால் இவ் விரு ஏரிகளுக்கும் தண்ணீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்துள்ள ஏரிக் கதவை சீா்செய்து தண்ணீா் விநியோகம் தொடா்ந்து கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.