பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் ஆலக்கட்டி மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மிதமான, கனமழை பெய்து வருகிறது. பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரியூா், பெரும்பாலை, ஒகேனக்கல், தாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
கனமழையினால் தாழ்வான குடியிருப்பு பகுதி, சாலையோர பகுதி மற்றும் வயல்வெளிகளில் தண்ணீா் அதிகளவில் தேங்கியது. பலத்த காற்றினால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பலத்த காற்றினால் சாகுபடி செய்யும் தருவாயிலிருந்து ராகி, நெல், சாமந்தி பூ, தக்காளி உள்ளிட்ட பயிா்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.