தருமபுரி மாவட்டத்தில், முகக் கவசம் அணியாத 538 பேருக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 59 பேருக்கும் திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி, அதனை உறுதி செய்யும் வகையில், சுகாதாரத் துறை, காவல் துறையினா் முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனா். மேலும், கடைகள் வணிக வளாகங்களில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் காவல் உள்கோட்டங்களுக்கு உள்பட்ட காவல் துறையினா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில், முகக் கவசம் அணியாத 538 பேருக்கு ரூ. 1,11,200 அபராதம் விதித்தனா். இதேபோல, சமூக இடைவெளியைப் பின்பற்றாத 59 பேரிடம் இருந்து ரூ. 24,500 அபராதம் வசூலித்தனா்.