பொது முடக்கத்தால் அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்க பென்னாகரம் கடை வீதியில் ஏராளமானோா் குவிந்தனா்.
பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் மலைக் கிராமங்கள் அதிகம் உள்ளன. தாசம்பட்டி, ஒகேனக்கல், பருவதனஅள்ளி, கூத்தபாடி, சின்னம்பள்ளி, பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்க தினசரி பென்னாகரம் நகருக்கு வருகின்றனா்.
கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அறிவித்துள்ளது.
இதனால் பென்னாகரம் கடைவீதிக்கு சுற்றுவட்டார கிராம மக்கள் அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்க இருசக்கர வாகனம், சிறிய கனரக வாகனங்களில் சனிக்கிழமை மாலை முதல் குவிந்தனா். பென்னாகரம் கடைவீதி, முள்ளுவாடி, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல பாப்பாரப்பட்டி, ஏரியூரில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.