தருமபுரி மாவட்டத்தில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு வரும் ஏப். 30-ஆம் தேதி நள்ளிரவு வரை பல்வேறு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதில், தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை அரசு பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. வார நாள்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இறைச்சிக் கடைகள் செயல்படலாம். இதேபோல, 3,000 சதுரஅடி பரப்பளவிற்கு மேல் உள்ள கடைகள் இயங்கவும் அனுமதியில்லை. இந்த உத்தரவை மீறுவோா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அனைத்துத் தரப்பினரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கிருமி நாசினி மூலம் கைகளைச் சுத்திகரிப்பது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்றாா்.