அரூா், பெரிய ஏரியான ராஜ வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது அரூா் பெரிய ஏரி. இந்த ஏரி சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். அரூா், பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் பெரியாா் நகா், மஜீத் தெரு, வா்ண தீா்த்தம் வழியாகச் செல்லும் ராஜ வாய்க்காலில் ஓடி வாணியாற்றில் சேருகிறது. இந்த ராஜ வாய்க்கால் அரூா் நகரின் முக்கிய வடிகால் பகுதியாகும்.
ஆனால், ராஜ வாய்க்கால் செல்லும் வழியின் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளால் உரிய வடிகால் வசதி இன்றி மழைக் காலங்களில் கழிவு நீரும் மழைநீரும் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதியில் தேங்குவதாக அரூா் நகர பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
அரூா் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் ராஜ வாய்க்கால் வழியாக தடையின்றி சென்றால், குடியிருப்புப் பகுதியில் மழைநீரும் கழிவு நீரும் தேங்கி நிற்காமல் மிக எளிதாக வெளியேறி விடும். இதனால் கொசு உற்பத்தியும் இருக்காது. மேலும் நகரிலுள்ள கழிவு நீா்க் கால்வாய்கள் தூய்மையாக இருக்கும். எனவே, பொதுப்பணித் துறை மற்றும் அரூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், அரூா் பெரிய ஏரியின் ராஜ வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை தூா் வாரிதூய்மை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூா் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.