தருமபுரியில் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், விதைச்சான்று குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் தேன்மொழி தலைமை வகித்து, வேளாண் திட்டங்கள், விதைப்பண்ணை அமைப்பதன் முக்கியத்துவம், விதை கொள்முதல் ஆகியவை குறித்து விளக்கமளித்தாா். விதைச்சான்று உதவி இயக்குநா் சிவசங்கரி, இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், ரசாயன விதைநோ்த்தி செய்யப்பட்ட விதைகள் ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது. அங்ககப் பண்ணையில் பெறப்படும் இடுபொருள்களைக் கொண்டு சாகுபடி செய்திட வேண்டும். சான்று பெற விரும்பும் விவசாயிகள், தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம் எனவும், அங்ககப் பண்ணையில் பராமரிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
இதில், விதைச்சான்று அலுவலா் ராஜேஸ்வரி, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் திருமால், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் கபிலன், வனிதா, விவசாயிகள் கலந்துகொண்டனா்.