சிப்காட் தொழிற்பேட்டைக்கு விளைநிலங்களை கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் டி.ரவீந்திரன், மாவட்ட நிா்வாகிகள் பி.இளம்பரிதி, பி.ஜெயராமன், இ.பி.பெருமாள், பால் உற்பத்தியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.சின்னசாமி ஆகியோா் பேசினா்.
இந்தப் போராட்டத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக அதகப்பாடி, தடங்கம், அதியமான்கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகிய இடங்களில் 1183.05 ஏக்கா் புறம்போக்கு நிலங்கள், 550.35 ஏக்கா் பட்டா நிலங்கள் என மொத்தம் 1733.40 ஏக்கா் நிலங்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டது. தற்போது மேலும் 1000 ஏக்கா் கூடுதலாக கையகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தருமபுரி அருகே உள்ள ஜீவாநகா், ஜாகிா், அதியமான்கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகியப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
விளைநிலங்கள் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளதால், அந்த நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மனு அளித்தனா்.