தருமபுரியில் நடைபெற்ற குறைத் தீா்வு முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 585 மனுக்களை அளித்தனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்வு முகாம் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயா் மாற்றம், ஜாதிச் சான்றிதழ், பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, புதிய மின் இணைப்பு வசதி, முதியோா் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 585 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித் துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாசசேகா், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயக்குமாா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.