தூய்மைப் பணியாளா்களுக்கு அரசாணைப்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் தொழிலாளா்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தருமபுரியில் செவ்வாய்க்கிழமை அந்த சம்மேளனத்தின் தருமபுரி மாவட்டத் தலைவா் சி.கலாவதி மற்றும் பொதுச் செயலா் ஆா்.செல்வம் ஆகியோா் தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் ம.வெங்கடேசனிடம் அளித்த கோரிக்கை மனு:
தமிழக அரசின் ஆணைப்படி நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் முறையே ரூ. 596, ரூ. 519, ரூ. 442 வழங்க வேண்டும்.
ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு இந்த ஊதியம் வழங்கப்படுவதில்லை. அதேபோல, மாவட்ட நிா்வாகத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ள ஊதியமும் வழங்கப்படுவதில்லை. எனவே, தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தொற்று தடுப்புப் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை ரூ.15,000, ஒப்பந்த, தினக்கூலி, தூய்மைப் பணி பரப்புரையாளா்கள், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்களுக்கு வழங்க வேண்டும். தொற்று பாதிப்பு தடுப்பு உபகரணங்களை தேவையான அளவு நாள்தோறும் வழங்க வேண்டும். வருங்கால வைப்புநிதி, தொழிலாளா் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழக அட்டை, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி, விசாகாக் குழு அமைத்துத் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.