தருமபுரி: தருமபுரியில் குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
சோகத்தூா் அருகே சிறுபிள்ளை கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவா்களது மகள்கள் இனியா (10), ஷிவானி (7). இருவரும் வீட்டின் அருகே உள்ள குட்டை அருகே விளையாடச் சென்றுள்ளனா். அப்போது, சிறுமிகள் இருவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த சிறுமிகளின் பெற்றோா் அப்பகுதியில் குழந்தைகளைத் தேடினா். அப்போது, குட்டை நீரில் இருவரும் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலின் பேரில், தருமபுரி நகர போலீஸாா் நிகழ்விடம் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் சடலங்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.