தருமபுரியில் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 150 போ் உரிமம் கோரி விண்ணப்பித்தனா்.
தருமபுரி நகர வா்த்தகா் அரங்கில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு செய்வதற்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஏ.பானு சுஜாதா தலைமை வகித்து, உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டியதன் அவசியம் குறித்தும், உணவு தயாரிப்பு, விற்பனையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
இதில், தருமபுரி நகரைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், உணவுப் பாதுகாப்பு உரிமம் கோரியும், புதுப்பிக்கக் கோரியும் விண்ணப்பங்களை வழங்கினா்.
நகர மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் உத்தண்டி, விநியோகிப்பாளா் சங்கச் செயலா் சேகா், தள்ளுவண்டி சிறு வியாபாரிகள் முன்னேற்றச் சங்கப் பொருளாளா் வடிவேல், தருமபுரி ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.