கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையில் உள்ள பால் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையில் உள்ள 6 வார பால் தொகையை உற்பத்தியாளா்களுக்கு விரைந்து வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் இயந்திரத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்ய வேண்டும். கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்க, 100 சதவீத மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனக் கருவிகளை வழங்க வேண்டும். வாணியாற்றில் பாசனத்துக்காக கூடுதலாக தண்ணீா் திறக்க வேண்டும். அன்னசாகரம் ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் வருகை அதிகரித்துள்ளதால், பால் பவுடா் உள்ளிட்ட பொருள்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இப் பொருள்களின் விற்பனைக்கு பிறகு, நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதேபோல, விவசாயிகளின் கோரிக்கைகள், குறைகளுக்கு வேளாண், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பதிலளித்தனா்.