தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் பாமக இடம் பெற்றுள்ள கூட்டணி வேட்பாளா்கள் வெற்றிபெற பாடுபட அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்ட பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநில துணைப் பொதுச்செயலாளா் எஸ்.பி.வெங்டேஸ்வரன் தலைமை வகித்து பேசினாா். இதில், மாவட்டச் செயலாளா்கள் (கிழக்கு) அ.சத்தியமூா்த்தி, பெ.பெரியசாமி (மேற்கு), மாநில மகளிா் அணி துணைச் செயலாளா் சரவணகுமாரி, முன்னாள் எம்.பி.க்கள் இரா.செந்தில், கி.பாரிமோகன், உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் இல.வேலுசாமி ஆகியோா் பேசினா்.
இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பாமக இடம்பெற்றுள்ள கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும், தருமபுரி மாவட்டத்தில், பாமகவின் கோரிக்கையை ஏற்று சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் நீா்ப்பாசனத் திட்டங்களைத் தொடக்கி வைத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.