பென்னாகரம் அருகே சின்னாறு வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
பென்னாகரத்தை அடுத்த சின்னாறு வனப் பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனா். அப்போது கோயில் பள்ளம் பகுதியில் உள்ள மாதேஸ்வரன் கோயில் அருகே துா்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வனத்துறையினா் அப்பகுதியில் சென்று பாா்க்கும்போது சிதைந்த நிலையில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததை கண்டனா்.
இதுகுறித்து வனத் துறையினா், பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.