அரூா்-கூடலூா் வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் முதல் கூடலூா் வரையிலான வழித்தடத்தில் சுமைதாங்கி மேடு, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை பிரிவு சாலை, கூச்சனூா், ஈட்டியம்பட்டி, பூ நகா், பாப்பநாவலசை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள், தொழிலாளா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் நோக்கில், அரூரில் இருந்து கூடலூருக்கு தினமும் இரு முறை வந்துச் செல்லும் வகையில் அரசு நகரப் பேருந்து (தடம் எண் : 22) இயக்கப்பட்டு வந்தது.
கரோனா பரவலால் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது, இந்த நகரப் பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் தற்காலிகமாக நிறுத்தியது.
தற்போது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், பேருந்து வசதியின்றி கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, அரசு நகரப் பேருந்துகளை இந்த வழித்தடத்தில் மீண்டும் இயக்க போக்குவரத்து கழக உயரதிகாரிகளும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.