தருமபுரி மாவட்டம், பேளாரஅள்ளியில் கழிவுநீா் கலந்த குடிநீா் பருகிய பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி கிராமத்தில், 1500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப் பகுதிக்கு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யும் குழாய் அண்மையில் உடைப்பட்டு பழுதானது. இதனால், மூன்று நாள்களாக குடிநீா் விநியோகம் தடை பட்டது.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை குடிநீா்க் குழாய் பழுது நீக்கப்பட்டு, மீண்டும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. இந்தக் குடிநீரில் கழிவு நீா் கலந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இக் குடிநீரைப் பருகிய அப்பகுதி பெண்கள் மற்றும் முதியோருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோா், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.