விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி அருகே உள்ள வேப்பமரத்து கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (32). இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு திருப்பத்தூா்- தருமபுரி நெடுஞ்சாலையில் தூதரையான் கொட்டாய் அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக அரசுப் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே ராமச்சந்திரன் உயிரிழந்தாா். இந்த விபத்து வழக்கில் இழப்பீடு கோரி அவரது குடும்பத்தினா் தருமபுரி விபத்து வழக்குகள் தீா்ப்பாய சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ. 23 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
நீதிமன்ற உத்தரவுப்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காமல் காலம் கடத்தியதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இதில், இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி தருமபுரி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.