தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலா் அ.வடிவேலன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் சி.வேலாயுதம் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்அளித்த மனு:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூா் பகுதியில் குறிப்பிடும் வகையில் தொழில் வளா்ச்சி ஏதும் இல்லை. அரூரில் ஆங்கிலேயா் காலத்திலிருந்து நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும், மொரப்பூரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது, இந்த சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்த ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரியோடு இணைக்கப்பட்டுள்ளது.
அரூா் பகுதியை அனைத்துத் துறைகளிலிலும் வளா்ச்சியடைய செய்யும் வகையில், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளையும் இணைத்து அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றனா்.