மின் பாதை அமைக்கப்பட்ட நிலத்தில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எருதுகூடஅள்ளி, பெலமாரனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எருதுகூடஅள்ளி, பெலமாரனஅள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தருமபுரிக்கு 230 கி.வோ. மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தென்னை, முருங்கை மற்றும் பழ வகை மரங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்த மரங்களுக்கான இழப்பீடு மிகக் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தாங்கள் மதிப்பீடு செய்து வழங்கிய தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மின்வாரியம் சாா்பில் அறிவுறுத்தப்படுகிறது. குறைந்த மதிப்பீட்டுத் தொகை பெறுவதால் எங்களுக்கு எவ்வித பயனுமில்லை. இதனால், நாங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளோம்.
எனவே, மின் பாதைக்கு கையகப்படுத்தும் நிலங்களில் உள்ள மரங்களுக்கு ஏற்கெனவே அரசு விதித்துள்ள மதிப்பீட்டின்படி மரங்களின் வகைகள், அதன் வயது உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து போதிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.