புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், செயற்குழு உறுப்பினா் எம்.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலா் இ.பி.புகழேந்தி பேசினாா்.
தில்லியில் போராடி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வுக் காண வேண்டும். விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் தொடங்கப்படும் சிறு மருத்துவமனைகளில் நிரந்தரமாக மருத்துவரை நியமிக்க வேண்டும். அமைப்புச்சாரா தொழிலாளா் நல வாரியத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜன. 20-ஆம் தேதி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.