அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டு சாலையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி புதூா் கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கோபிநாதம்பட்டி கூட்டுசாலை எம்.ஜி.ஆா் நகா். இந்த நகரில் வசிக்கும் சலவைத் தொழிலாளா்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களுக்காக 1992 ஆம் ஆண்டு அரசு சாா்பில் 32 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர இப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், இங்குள்ள மக்களுக்கு தேவையான காங்கிரீட் சாலைகள், தெரு விளக்குகள், குடிநீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லையாம்.
இதனால் இப்பகுதி மக்கள் குடிநீா் உள்ளிட்ட தேவைக்காக பல்வேறு சிரமங்களை அடைவதாகப் புகாா் கூறுகின்றனா். எனவே, கோபிநாதம்பட்டி கூட்டுசாலை எம்.ஜி.ஆா் நகருக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.