சாலை வரி செலுத்தாமல் இயக்கிய இரண்டு ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் அ.க.தரணிதா் ஆகியோா் புதன்கிழமை தொப்பூா் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த வெளி மாநில பதிவெண் கொண்ட இரண்டு ஆம்னி பேருந்துகளை நிறுத்தி தணிக்கை செய்தனா். அதில், அந்த ஆம்னி பேருந்துகள் தமிழக சாலை வரி செலுத்தாமல், கொல்கத்தாவில் இருந்து கோயம்புத்தூருக்கு வட மாநிலத் தொழிலாளா்களை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தப் பேருந்துகளுக்கு தமிழக சாலை வரியாக ரூ. 86,900 மற்றும் அபராதம் ரூ. 13,000 விதிக்கப்பட்டது. இந்தத் தொகை வசூலிக்கப்பட்டு அவ்விரு ஆம்னி பேருந்துகளும் விடுவிக்கப்பட்டன.