பென்னாகரம் அருகே திறப்பு விழா கண்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒரு மணி நேரத்தில் கட்டுமான மேஸ்திரி பூட்டிவிட்டு சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு புதிதாக
ஊராட்சி மன்ற அலுவலகம், பி.கோடுபட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2017 - 2018 திட்டத்தின் கீழ் ரூ. 17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருந்தது. ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள மாதம்மாள் கோவிந்தசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் பலமுறை முறையிட்டு அலுவலகத்தை திறக்க முயற்சி மேற்கொண்டாா்.
இதையடுத்து புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடத்தை ஊராட்சி மன்றத் தலைவா் திறந்து வைத்தாா்.
இந்நிலையில் கட்டட மேஸ்திரி செல்வம், புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டியதில், தனக்கு ரூ. 6 லட்சம் வரை தரப்படாமல் உள்ள நிலுவைத் தொகையைச் செலுத்திய பின்னரே அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று கூறி, திறப்பு விழா கண்ட ஒரு மணி நேரத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ‘பூட்டு’ போட்டுவிட்டு சென்றாா். மூன்று வருடங்களுக்கு பின்னா் திறப்பு விழா கண்ட ஊராட்சி மன்ற அலுவலகம் சிறிது நேரத்திலேயே பூட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.