தேன்கனிக்கோட்டை அருகே உடல் நலக்குறைவால் காட்டு யானை உயிரிழந்தது.
ஒசூா் வனக்கோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் ராகி அறுவடையின் போது ஒசூா் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயத் தோட்டங்களில் புகுந்து விளைபொருள்களை சாப்பிட்டுவிட்டு 6 மாதங்களுக்கு தங்கி இருக்கும். மீதமுள்ள 6 மாதங்களுக்கு கா்நாடக வனப்பகுதிகளுக்குச் சென்றுவிடுவது வழக்கம்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையை அடுத்த புல்லள்ளி வனப்பகுதியில் 6 வயது ஆண் காட்டு யானை உயிருக்குப் போராடுவதாக தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகா் சுகுமாா் தலைமையில் கால்நடை மருத்துவா் பிரகாஷ், வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை மேற்கொண்டனா். ஆனால் யானை உணவு உட்கொள்ளாமல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. இதுகுறித்து ஒசூா் கோட்ட வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.