மொரப்பூரில் வங்கி கணக்கில் ஆதாா் எண்களை சோ்ப்பதற்காக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களின் வங்கி கணக்கில் ஆதாா் எண்களை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மொரப்பூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை முன்பு வங்கி கணக்கில் ஆதாா் எண்களை இணைக்க ஏராளமான தொழிலாளா்கள் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா்.
வங்கி வாசல் முன்பு நாள்தோறும் மணிக்கணக்கில் காத்திருக்கும் பெண் தொழிலாளா்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனா். எனவே, மொரப்பூரில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் இதற்கென சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.