விவசாய மின் இணைப்புகள் கோரியவா்களுக்கு, தாமதமின்றி வழங்க வேண்டும் என தருமபுரி தொகுதி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அறிவுறுத்தினாா்.
தருமபுரி அருகே உள்ள அதகப்பாடி துணை மின் நிலையம் மற்றும் தருமபுரி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா், விவசாயத்துக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவா்களுக்கு காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும். இண்டூரை அடுத்த தாசன்கொட்டாய் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அந்தப் பகுதிகளில் புதிதாக மின் மாற்றி அமைத்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, பாமக மாவட்டச் செயலா் பெரியசாமி, மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, மாநில இளைஞரணி செயலா் முருகசாமி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தமிழரசி, உதவி பொறியாளா் கணேஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.